கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில் முன்ஜாமின் கோரி தீட்சிதர் மனு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில் முன் ஜாமின் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 16-ம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய கோரிய பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமின் கோரி தீட்சிதர் தர்ஷன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டும் என அந்த பெண் தகராறு செய்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னை நோக்கி கையை தூக்கியதால், தான் தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், வழக்கு விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதற்கு முன்னரே முன் ஜாமின் கோரி தீட்சிதர் தர்ஷன் தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே வாபஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே