என்னோட டைரக்டர்… நான் எழுப்பினா வந்திடுவார் – இயக்குநர் ஜனநாதனை பார்த்து விஜய் சேதுபதி உருக்கம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்துள்ளார் விஜய் சேதுபதி.

தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தை இயக்கி வருகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 11-ம் தேதி எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்து மதிய உணவு சாப்பிட வீட்டுக்குச் சென்றார்.

நீண்ட நேரமாகியும் ஸ்டுடியோவுக்கு திரும்பி வராததால் அவரது உதவியாளர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தனது அறையில் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார் ஜனநாதன். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்த விஜய் சேதுபதி அவரை கையால் வேகமாக தட்டி எழுப்ப முயன்றுள்ளார். அப்போது அருகிலிருந்தவர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க அவர் என்னுடைய இயக்குநர். நான் அழைப்பது அவருக்கு கேட்கும். எழுந்து வந்துவிடுவார் என்று உருக்கமாக கூறியுள்ளார். இத்தகவலை பேராண்மை படத்தில் நடித்தவரும் எஸ்.பி.ஜனநாதன் அலுவலகத்தில் வேலை செய்பவருமான நடிகை சரண்யா இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “எங்களது இயக்குநர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்றும் வெளியிடப்படும் தகவல்கள் வேதனை அளிக்கிறது. ஒரு கலைஞனுக்கு மூளைச்சாவு என்பது வராது. அவர் மீண்டு வந்துவிடுவார். சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. பா.ரஞ்சித் மருத்துவமனைக்கு வந்தபோது இயக்குநரை தொட்டு அடுத்த படத்துக்கு கூப்பிடுங்கள். அவர் எழுந்து வந்துவிடுவார் என்றேன். பா.ரஞ்சித் உணர்ச்சிவசப்பட்டு அழுது விட்டார்.

ஸ்ருதிஹாசன் எஸ்.பி.ஜனநாதனைப் பற்றி எதுவும் கருத்து பதிவிடவில்லை என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அவருக்கென வேலை சூழ்நிலைகள் இருக்கும். இயக்குநர் உடல்நலத்துடன் திரும்ப வந்துவிடுவார் என்று எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதனால் அவர் எந்தவிதமான கருத்தையும் பதிவிடாமல் இருக்கலாமே தவிர ஸ்ருதிஹாசனுக்கும் இயக்குநருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுமில்லை. இணை இயக்குநர், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவரும் மருத்துவமனையில் தான் இருக்கிறோம்.” இவ்வாறு நடிகை சரண்யா தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே