நடிகை ரம்யாகிருஷ்ணன் காரிலிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை வாகனச் சோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீஸார், அங்கு வந்த TN07CQ0099 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா சொகுசு காரை மறித்து, அதில் இருந்தவர்களிடம் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது அந்த காரில் இருந்த பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி அபிநயா கிருஷ்ணன் ஆகியோர் சோதனையிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
காரை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 24 பீர் பாட்டில்கள் மற்றும் 8 மதுபாட்டில்களை கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே போலீஸார், இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.
சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் செல்வகுமாரை நடிகை ரம்யாகிருஷ்ணனும் அவரது சகோதரி அபிநயா கிருஷ்ணனும் ஜாமீனில் அழைத்துச் சென்றனர்.
சென்னையை சேர்ந்த மதுப்பிரியர்கள் செங்கல்பட்டு மாவட்ட எல்லை பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு சென்னை திரும்பும்போது போலீசார் சோதனையில் சிக்கும் போது அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலைத்தில் சிறைபிடிக்கும் போலீசார், நடிகையின் காரை மட்டும் ஏன் விடுவித்தனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.