விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ இயக்குநர் மாற்றம்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகவுள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார்.

2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமனுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

கரோனா ஊரடங்கு சமயத்தில் ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதி முடித்தார். விஜய் ஆண்டனியே தயாரித்து நடிக்க தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதனை ‘பாரம்’ படத்துக்காகத் தேசிய விருது வென்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார். ப்ரியா கிருஷ்ணசாமிக்குப் பதிலாக ஆனந்த் கிருஷ்ணன் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தின் இயக்குநராவார். அவருடைய பணி விஜய் ஆண்டனிக்கு மிகவும் பிடித்திருக்கவே, அவரிடம் ‘பிச்சைக்காரன் 2’ இயக்குநர் பொறுப்பை வழங்கியுள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் என அனைத்துமே விஜய் ஆண்டனி தான். வெறும் இயக்குநர் பொறுப்பை மட்டுமே ஆனந்த் கிருஷ்ணன் கவனிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கு இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே