கொரோனா தடுப்புப்பணிகளை ஆய்வுசெய்ய பறக்கும் படை போல சிறப்பு குழு அமைக்கப்படும்.. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தேர்தல் பறக்கும் படை போன்று சுகாதாரத்துறை, காவல்துறையும் இணைந்து கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று வாரங்களாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருப்பது வேதனையளிப்பதாகக் கூறினார்.

சுபநிகழ்ச்சிகள் போன்றவற்றில் மக்கள் அதிகளவில் கூடுவது, பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக செல்வதால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனக் கூறிய அவர், தாம்பரம், எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் பறக்கும் படை போன்று சுகாதாரத்துறை, காவல்துறையும் இணைந்து கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள சூழலில், நோய் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே