விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.
திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிக பிரசித்தி பெற்றது.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் வாரத்தின் முதல் சனிக்கிழமையான இன்று அதிகாலை சீனிவாச பெருமளுக்கு காலை 3 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்தி கோயிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து கணிக்கை வழங்குவது வழக்கம்.
கரோனா அச்சம் காரணமாக ஶ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முக கவசம் அணிந்து வருவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
10 வயதிற்கு கீழ் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது.
உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
கோயிலுக்கு ஆட்டோக்களில் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு 700 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
30 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எதிர்பாராத விபத்துக்களைத் தடுக்கும் விதமாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.