அதிமுக மீது ஜெ. தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுகவில் சேர்வதற்கு சில மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா பரபரப்பு குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கிய ஜெ. தீபா, பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார்.

கடந்த மாதம் திடீரென செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா தனது அமைப்பை கலைப்பதாகவும், அதிமுகவில் இணைய உள்ளதாகவும் கூறினார்.

எனினும், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் இன்று தனது தி.நகர் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்த பின்னரும் அதிமுகவில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்போ, இணைப்பு நிகழ்ச்சியோ நடைபெறவில்லை.

அதிமுகவில் சேர்வதற்கு சில மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.

எங்களை தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டுள்ளோம். உரிய மரியாதை கொடுக்கவில்லை.

கட்சியில் எனக்கு கொள்கை பரப்பு செயலாளராக பதவி வழங்கப்படும் என எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் எங்கள் தொண்டர்கள் சென்ற போது அங்கு உரிய மரியாதை இல்லை.

எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே