அரியலூரில் தற்கொலை செய்துகொண்ட விக்னேஷ் குடும்பத்தினருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ்(19), நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சுட்டுரையில், அரியலூர் – இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் நேற்று மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
மாணவர் விக்னேஷ் அவர்களின் பிரிவால் மிகுந்த துயருற்றருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெற்றோர்கள் குழந்தைகளை தனிமையில் விடாமல் அவர்களின் விருப்பங்கள் அறிந்து உரிய அறிவுரைகள் வழங்கி அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ளுமாறும்; மாணவர்கள் துணிவுடன் எதையும் எதிர்கொள்ளும் தன்மையையும் விடா முயற்சியையும் வளர்த்துக் கொள்ளவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.