தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு..; எவை எவைக்கு அனுமதி..??

தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 13 வகையான பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளன. இந்நிலையில், எவை எவைக்கு அனுமதி என்ற விவரத்தையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பு:

”கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்த அரசு, நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்தில் முழு ஊரடங்கை 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

நடமாடும் மளிகை, காய்கறிகள் அனுமதி

* பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.

* மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யலாம்.

* ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

* பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும்.

* மளிகை, காய்கறிக் கடைகள் நேரடியாகத் திறந்து விற்பனை செய்ய அனுமதி இல்லை. வழக்கமாக உள்ள கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே