அந்த ஆசிரியரை தூக்கிலிடுங்கள்; ஆனால், சாதி பிரச்னையாக மாற்றாதீர்கள் – விஷால் காட்டம்..!!

தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் தொந்தரவு சம்பவம். சென்னை கே.கே நகரிலுள்ள தனியார் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலான், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக அப்பள்ளி மாணவிகள் பலரும் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் ஆசிரியர் ராஜகோபாலன் மீண்டும் மீண்டும் மாணவிகளிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. ஆசிரியரின் செல்போன், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இதில் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இது தொடர்பான புகாரில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த கொடூர சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷாலும் இந்த கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், பிஸ்பிபி பள்ளி ஆசிரியரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. இப்பள்ளி மூடப்படவேண்டும் என்று உணர வைத்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை.

எனது நண்பர் அன்பில் மகேஷ் இப்பிரச்சனையில் வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேசமயம், இதனை சாதி பிரச்சனையாக மக்கள் மாற்றுவது இழிவானது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் தூக்கிலிடப்படவேண்டும். இப்போதாவது, பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இதை சாதி பிரச்சனையாக மாற்றாதீர்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே