சென்னையில், கரோனா பாதித்த நோயாளிகளுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.127 கோடி மதிப்பில் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பதாவது, தமிழக அரசு, முதல்வர் பழனிசாமியின் தலைமையில் பல்வேறு கரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாக உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக சென்னை கிங் இன்ஸ்ட்டியுட் வளாகத்தில் ரூ.127 கோடி பொருட் செலவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தினை கோவிட் சிகிச்சை மையமாக மாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இம்மையம் 750 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையமாக தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.
இவற்றுள் ஆக்சிஜன் வசதியோடு கூடிய 300 படுக்கை வசதிகளும், 60 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் அடங்கும்.
இம்மையத்தில் 16 கூறு சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்கோ கார்டியாகிராம், 6 நடமாடும் எக்ஸ்-ரே கருவிகளும், 28 வெண்டிலேட்டர்கள், 40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள், 10 நடமாடும் ஆக்சிஜன் வழங்கும் கருவிகள் ஆகியவைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றி வருகிறது.
மேலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகளுடன் 80 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
உலகத்தரம் வாய்ந்த இம் மருத்துவமனையை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்து உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.