சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக கூறி விடுதி காப்பாளர் லலிதா தேவி, கொடுத்த புகாரில் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்திருந்தது.
தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காவல்துறை ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக பத்திமாவின் தந்தையும் பேட்டியளித்திருந்தார்.
மேலும், கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி’யில் 5 மாணவர்கள் இதே போல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ச்சியாக இது போன்ற மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்ற உத்தரவிடக்கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் அஸ்வத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவினர் முறையான விசாரணை நடத்தி வருகிறது எனவும், விசாரணை குழுவில் சிபிஐ யில் பணியாற்றிய இரு அதிகாரிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.