சென்னையில் காவல்துறை அதிகாரி உட்பட 22 காவலர்களுக்கு கொரோனா தொற்று

சென்னையில் காவல்துறை அதிகாரி உள்பட 22 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக உள்ளது.

இதில் சென்னையில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பலரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சென்னையில் காவல் அதிகாரி உள்பட 22 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

முன்னதாக, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த துணை காவல் ஆணையருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி, 1,458 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே