துபாய் வழியே விமானம் மூலமாக தமிழகத்திற்கு வந்த 14 பேருக்கு கொரோனாவைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.
125 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பால் இது வரை 5,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,000 பேருக்கு மேல் உள்ளது. இந்தியாவிலும் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, தியேட்டர் போன்றவை மூடப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் துபாய் வழியே விமானம் மூலமாக தமிழகம் வந்த 14 பேருக்கு கரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.