இந்தியாவில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக (இந்தியாவில் வாழும் வெளிநாட்டவர்களையும் சேர்த்து) (மார்ச் 15ஆம் தேதி மதியம் 12 மணிவரை) உயர்ந்துள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரானில் இருந்து 236 இந்தியர்கள் ராஜஸ்தானின் ஜெய்சல்மீருக்கு அழைத்து வரப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறுகிறார்.

இரானிலிருந்து வந்த அனைவரும் இந்திய ராணுவ சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவிலிருந்து துபாய் புறப்பட்ட துபாய் பவுன்ட் எமிரேட்ஸ் விமானத்திலிருந்த இங்கிலாந்து பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதே விமானத்திலிருந்த 289 பயணிகள் தங்களின் பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புனேவில் மட்டும் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மகாராஷ்டிர முழுவதும் திரையரங்கங்கள், வர்த்தக மையங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் சுகாதாரத் துறையினர் அந்நகரம் முழுவதும் சோடியம் தெளித்து வருகின்றனர்.

ஆந்திராவின் திருப்பதி கோயிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் மேற்கொள்ளும் வழிமுறையை நிறுத்தி உள்ளனர்.

மாறாக வெவ்வேறு நேரத்தில் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறாது என அம்மாநில கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.

ஒடிஷா மாநிலத்தில் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளத்தில் தவறான தகவல் தகவல் பரப்பியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக்கில் கொரோனா பாதிப்பு உள்ள ஒருவர் உள்ளூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தவறான தகவலைப் பரப்பியதாக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஒடிஷா காவல் துறையினர் கூறுகின்றனர்.

கோவாவின் கத்தோலிக்க தேவாலயம் மக்களை பிரார்த்தனை நிகழ்வுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

மேலும் தேவாலய பாதிரியார்களைக் கையை சுத்தம் செய்த பின்பு புனித நீர் அல்லது தொட்டு ஆசிர்வதித்தல் உள்ளிட்ட சம்பிரதாயங்களை மேற்கொள்ளுமாறு பாதிரியார்களுக்குத் தேவாலய நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மைசூரு அரண்மனை மார்ச் 22 வரை மூடப்பட்டிருக்கும, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கர்நாடக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே