இந்தியாவில் பதற்றம் நிறைந்த புல்வாமா பகுதியில் கடந்த வருடம் நடந்த தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இந்த சம்பவத்தையடுத்து புல்வாமா பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் படி இப்போது ஒரு வாகனத்தில் சுமார் 20 கிலோ எடையுள்ள வெடிப்பொருட்கள் பிடிபட்டது.
இதனால் புல்வாமா பகுதியில் அதிக பதற்றம் நிலவி வருகிறது.
“கடந்த இரண்டு நாட்களாக ராணுவம், காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் உளவுத்துறையின் தகவலையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று அதிகாலை வாகன சோதனையில் கார் ஒன்று நிற்காமல் சென்றதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் காரை விரட்டிச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் கார் ஓட்டுநர் தப்பித்துவிட்டார்” என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட காரில் இருந்து 20 கிலோ அளவிலான வெடிபொருட்கள் (IED) மீட்கப்பட்டது.
இந்த அளவிலான வெடி பொருட்கள் ஒரு பெரிய தாக்குதலுக்கு போதுமானதாகும். மீட்கப்பட்ட வெடி பொருள் பத்திரமாக அழிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை ராணுவம், காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது என குமார் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா-சீனா எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் தற்போது புல்வாமா பகுதியில் மிகப் பெரிய அளவிலான 20 கிலோ வெடி பொருட்கள் பிடிபட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.