விவேக்கின் நெருங்கிய உறவினருக்கு கொரோனா! அரசு மருத்துவமனை பற்றி அவரது ட்வீட்.

நடிகர் விவேக்கின் மைத்துனர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், அரசு மருத்துவர்களுக்கு விவேக் நன்றி கூறி உள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களை வைத்திருக்கும் காமெடி நடிகர் விவேக். அவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மேலும் அதிக அளவில் மரம் நட வேண்டும் என இளைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார் விவேக்.
தற்போது கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிக அளவிலான மக்களை இந்தியாவில் தாக்கி வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 8 லட்சத்து 78 ஆயிரம் மக்களுக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 23 ஆயிரத்து 174 நபர்கள் பலியாகியுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை தினம்தோறும் அதிகம் உயர்ந்து வருகிறது என்பதால் அதை பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி நடிகர் விவேக் பல்வேறு வகையில் விழிப்புணர்வை ட்விட்டரில் ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை பணியாளர்கள் ஆகியோரை அவர் பாராட்டவும் தயங்குவதில்லை. தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது பற்றிய விவரங்களை ட்விட்டரில் விவேக் பதிவிட்டு மருத்துவர்களுக்கு நன்றி கூறி உள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது.. “எனது மைத்துனர்,கொரோனாவால்) காய்ச்சல்,மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி,சிகிச்சை,தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு விவேக் ‘அச்சமும் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்’ என்ற குறிப்புடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது..

“பொது மக்கள் மாஸ்க் அணிகிறோம் என்ற பெயரில் ஏதோ ஒரு துணியை வாயில் கட்டிக் கொள்கிறார்கள். சில நேரத்தில் அது கழுத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது, சில நேரங்களில் ஸ்டைலாக காதில் தொங்க விடுகிறார்கள், அப்போது மற்றவர்களிடம் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். மாஸ்க் போடுபவர்கள் மூக்கையும் வாயையும் முழுமையாக மூடும் வகையில் அணிய வேண்டும். பாதிபேர் பேசும் போது அந்த மாஸ்க்கை எடுத்து விட்டு பேசுகிறார்கள். இப்படியெல்லாம் செய்யும் போது அந்த மாஸ்க் ஏன் போட வேண்டும்?. அதற்கான பயனே நமக்கு சரியாக வராது. எந்த நோக்கத்திற்காக போடுக்கிறோமோ அந்த நோக்கமே நிறைவேறவில்லை. சமூக இடைவெளி ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் வரை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதே போல வீட்டுக்குள் நுழையும் போது கைகளை கால்களை கழுவ வேண்டும்.. குளித்துவிட வேண்டும். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே கொரோனா நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். மக்கள் இதில் அலட்சியம் காட்டக் கூடாது. அச்சம் தேவையில்லை, ஆனால் நிச்சயம் அலட்சியம் ஆபத்து” என விவேக் குறிப்பிட்டிருந்தார்.
விவேக் கடைசியாக தாராள பிரபு என்ற படத்தில் நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்த அந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன விக்கி டோனர் என்ற படத்தின் ரீமேக் தான். இதில் தான்யா ஹோப் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு அதிக அளவில் பாராட்டுகளும் நல்ல விமர்சனங்களும் கிடைத்தது. இருப்பினும் அந்த படம் வெளியான சில நாட்களிலேயே அரசு கொரோனா லாக் டவுன் போட்டதால் தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டது. அதனால் தாராள பிரபு படத்தின் வசூலில் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. அதன் பின்னர் அந்த படம் ஓடிடி இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விவேக் அடுத்து கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கி வரும் அந்த பிரம்மாண்ட படத்தில் காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக துவங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே