கரோனா தொற்று தமிழகம் எங்கும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதிகம் தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களின் நிலை குறித்து அம்மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்தினார்.
கரோனா தொற்று தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மொத்த கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக விளங்குவது கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்ட தொற்றே.
அதன் பின்னர் மாவட்ட அளவில் அனைவரும் இடம் பெயர்ந்ததால் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது.
ஆரம்பத்தில் சென்னையில் மட்டுமே ஆயிரக்கணக்கில் தொற்று எண்ணிக்கை இருந்தது. மற்ற 36 மாவட்டங்களில் 10, 20 என்கிற எண்ணிக்கையிலேயே இருந்தது.
இந்நிலையில் சென்னையில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது சென்னையிலிருந்து மாவட்டங்களுக்குப் பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர்.
அதேபோன்று ஊரடங்கு தளர்வு காரணமாக ரயில், விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து பொதுமக்கள் தமிழகம் திரும்பியதால் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது.
கடந்த ஒரு மாதத்திற்குள் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை நான்கு இலக்கத்தை அடைந்துள்ளது.
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. நேற்று அதிகபட்சமாக 1,713 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தொற்று கண்டறியப்பட்ட 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக
- செங்கல்பட்டு 6,633,
- திருவள்ளூர் 4,806 ,
- மதுரை 4,085,
- காஞ்சிபுரம் 2,547,
- திருவண்ணாமலை 2,497,
- வேலூர் 1,932 ,
- கடலூர் 1,257 ,
- தூத்துக்குடி 1,162 ,
- ராமநாதபுரம் 1,385,
- சேலம் 1,247,
- கள்ளக்குறிச்சி 1,205,
- விழுப்புரம் 1,186 ,
- ராணிப்பேட்டை 1,148,
- திருநெல்வேலி 1,030,
- தேனி 1,009 ஆகிய 15 மாவட்டங்கள் 1000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டன.
மதுரையில் தொற்று எண்ணிக்கையில் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஊரடங்குத் தளர்வு காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வழக்கமான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள 15 மாவட்டங்களின் நிலை குறித்து அம்மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.
ஊரடங்கு அமல்படுத்தப்படுவதில் உள்ள நடைமுறைகள், ஊரடங்கைத் தளர்வுகளுடன் அமல்படுத்தலாமா? முழு ஊரடங்கை அமல்படுத்துவதா?
அதிக அளவில் சோதனைகள் மேற்கொள்வது, இம்மாவட்டங்களில் ஊரடங்கை எவ்வாறு அமல்படுத்துவது உள்ளிட்ட பல அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் மேற்கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் அரசின் அறிவிப்புகளாக வெளிவரும் எனத் தெரிகிறது.