திருமழிசை காய்கறி மார்க்கெட்டுக்கு ஞாயிறுதோறும் விடுமுறை என அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவியதால், மார்க்கெட்டை மூட மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
சென்னையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக உருவெடுத்ததற்கு காரணமும் கோயம்பேடு மார்க்கெட் தான்.
அதனால் அந்த மார்க்கெட் மூடப்பட்டு, மக்களின் தேவைக்காக திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது.
ஆனால் கோயம்பேடு மார்க்கெட் போல திருமழிசையில் வியாபாரம் நடக்கவில்லை என்பதால் மீண்டும் அதனை திறக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.
அதற்கு மாவட்ட நிர்வாகமும் அரசும் முன்வரவில்லை.
இதனையடுத்து, ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தவித்து வரும் நிலையிலும் மார்க்கெட்டை திறக்கவில்லை என்றால் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவோம் என வணிகர்கள் சங்க தலைவர் விக்கிரமராஜா தெரிவித்திருந்தார்.
அதனால் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்குள் மார்க்கெட் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், செப்டம்பர் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் திருமழிசை காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்று கிழமை விடுமுறை அளிக்குமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்ததால், அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.