கோவையில் நாளை முதல் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்: சுகாதாரத்துறையினர் தகவல்

கோவையில் நாளை முதல் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ள, நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற இணைநோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி ரூ.150 மற்றும் சேவை கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவையில் 25 அரசு மருத்துவமனைகளில் மட்டும் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாளை (மார்ச் 12) முதல் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறியதாவது:

“கோவையில் மொத்தம் 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இது தவிர, பொள்ளாச்சி, மேட்டுப்பாளைம் என 12 அரசு மருத்துவமனைகள், 2 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைகள் உள்ளன. இவையனைத்திலும் நாளை முதல் கரோனா தடுப்பூசி போடப்படும். இதற்காக சுகாதாரப்பணியாளர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள், அசல் ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்ல வேண்டும். 45 வயது முதல் 59 வயதுள்ளவர்கள், தங்களுக்கு இணை நோய் உள்ளது என்பதற்கான மருத்துவ சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

கோவையில் கரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்க முகக்கவசம் அணிவதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கோயில்கள், திருமணம் உள்ளிட்ட கூட்டமான இடங்களுக்கு செல்வோரின் குடும்பங்களில் ஒரே வீட்டில் 2, 3 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அரசு அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே