கொரோனா மையமாக மாறிய கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது..!! கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றம்

கொரோனா தொற்று உச்சத்தில் இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாளை முதல் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை 05.05.2020 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற (7.5.2020) வியாழக் கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம்.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே