தவறுதலாக தண்டிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

உத்தர பிரதேசம் லலித்பூரை சேர்ந்த விஷ்ணு திவாரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 2000-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்ற தீர்ப்பால் சுமார் 20 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்துள்ளார். அவர் நிரபராதி என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்துள்ளது.

இதேபோல தவறுதலாக தண்டிக்கப்பட்ட பலர் சிறை வாசம் அனுபவிக்க நேரிடுகிறது. அவர் கள் நிரபராதி என்று நிரூபிக்கப் படுவதற்குள் எதிர்காலம் பாழாகிறது. தவறுதலாக தண்டிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்க தற்போது நடை முறையில் உள்ள விதிகள் காலத்துக்கு ஒவ்வாதவையாக உள்ளன. எனவே தவறுதலாக தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்த நிரபராதிகளுக்கு உரிய இழப்பீடு, நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தற்போதுள்ள சட்டத்தில் முக்கிய திருத்தங்களை செய்ய வேண்டும். சட்டத் திருத்தம் அமலுக்கு வருவதற்கு காலதாமதம் ஏற்படலாம். அதற்கு முன்பாக நிரபராதிகளுக்கு நிவாரணம் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் புதிய விதிகளை வரையறுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே