அயோத்தி தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு!

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்திலுள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த வழக்கில், தீர்ப்பு இந்து அமைப்புகளுக்கு சாதகமாக அமைந்தது.

சன்னி வஃக்பு வாரியம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதாக அறிவித்தது.

சன்னி வஃக்பு வாரியம் சார்பில் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அறிவித்தது.

இந்த நிலையில் மவுலானா சயித் ஆசாத் ரஷித் என்பவர் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அயோத்தி வழக்கைத் தொடர்ந்தவரின் சட்டவாரிசு தான் இந்த மவுலானா ராஷித்.

அவர் தொடர்ந்த மறுசீராய்வு மனுவில், இந்து அமைப்புகளால் செய்யப்பட்ட சட்டவிரோத செயல்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்கு பரிசாக அயோத்தி நிலத்தை வழங்கியுள்ளனர்.

அடிப்படை ஆதாரங்களுக்காக நிலத்தை வழங்கவில்லை. மாறாக சட்டவிரோத செயல்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளேன்.

இந்த வழக்கு முடிவுக்கு வரவேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளேன்.

இருந்தாலும் நீதி கிடைக்காத இடத்தில் அமைதி இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். அயோத்தி தீர்ப்புக்கு எதிராக வழங்கப்பட்ட முதல் மறுசீராய்வு மனு இதுவாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே