‘தளபதி 65’ அப்டேட்: நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம்

தளபதி 65′ படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

தற்போது இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்ய ரஷ்யாவில் இருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இதில் விஜய்க்கு நாயகியாக நடிப்பதற்கு பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன. இருவருமே விஜய் படம் என்பதால், நடித்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டினார்கள்.

இறுதியாகப் படப்பிடிப்பு தேதிகள் அனைத்தும் முடிவானபோது, பூஜா ஹெக்டேவுக்கு அந்த தேதிகள் ப்ரீயாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். விரைவில் இதன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்துக்குப் பிறகு பூஜா ஹெக்டே எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து விஜய்க்கு நாயகியாக அவரை ஒப்பந்தம் செய்து, மீண்டும் தமிழுக்கு அழைத்து வருகிறது ‘தளபதி 65’ படக்குழு.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே