தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு..!!

கோவை செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(38); நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி (32).

இவர்களுக்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த புண்ணியவதி மிகுந்த மனவருத்தத்துடன் இருந்துள்ளார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான புண்ணியவதி வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, தொப்புள் கொடியை சரியாக அறுக்காத நிலையில், பிரசவமும் சரியாக பார்க்காததால் தாயும் சேயும் மயங்கியுள்ளனர்.

இதையடுத்து 2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், சரியாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரியகடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி, புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315- (குழந்தை இறந்து பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் உயிரிழப்பு ஏற்பட வேண்டும் என்று செயல்படுவது) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே