மு.க.ஸ்டாலின் தரும் நற்சான்றிதழுக்காக முதல்வர் பணியாற்றவில்லை.. மக்களின் தேவைக்காக பணியாற்றுகிறார்…செல்லூர் ராஜூ…!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரும் நற்சான்றிதழுக்காக முதல்வர் பணியாற்றவில்லை என்றும் மக்களின் தேவைக்காக பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை தெற்குவாசல் சந்தையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

மக்களிடம் ஊரடங்கை திணிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் சிலருக்கு கொரானா என்று சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புவதாக அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.

கொரானா பாதிப்பை உலக நாடுகளே கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதால், இறை நம்பிக்கை கொண்ட முதல்வர் கடவுளுக்கு தான் தெரியும் என கூறியதாக செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சான்றிதழ் கொடுப்பதற்காக முதல்வர் வேலை செய்வதில்லை என்று கூறிய செல்லூர் ராஜூ, மக்களின் தேவைக்காகவே முதல்வர் செயல்படுவதாக கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே