விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

வைகை அணையிலிருந்து வரும் 31-ம் தேதி முதல் 120 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.29) வெளியிட்ட அறிக்கை:

“தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்களுக்கு, நாளொன்றுக்கு 900 கன அடி வீதம், 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும், மொத்தம் 120 நாட்களுக்கு 6,739 மி.க. அடி தண்ணீரினை வரும் 31-ம் தேதி முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே