அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெற முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
“அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாளை (5.8.2020) நடைபெற உள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும்; தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
1992 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஜெயலலிதா, “அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்”,என்று வலியுறுத்திப் பேசினார்கள்.
அதேசமயம், மசூதியும் அயோத்தியில் இருக்க வேண்டும் என விரும்பினார்கள்.
இதன் மூலம், தேசிய ஒற்றுமைக்காகவும், நாட்டின் நன்மைக்காகவும், இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை அவர் விரும்பினார் என்பது தெளிவாகிறது.
உச்சநீதிமன்றம் வழங்கிய, அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கத்தக்க, ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, மத்திய அரசு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்து மக்களின் கனவை நனவாக்கும் வகையில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.