இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஸ்பான்சராக உள்ள சீன நிறுவனமான விவோ, தனது ஸ்பான்சர்சிப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
ஐ.பி.எல்., ‘டுவென்டி-20’ கிரிக்கெட் தொடரின் ‘டைட்டில் ஸ்பான்சர்’ உரிமத்தை, சீன மொபைல் நிறுவனமான ‘விவோ’, ரூ. 2,199 கோடிக்கு வரும் 2022 வரை பெற்றுள்ளது.
சமீபத்தில், இந்தியா, சீனா இடையே கல்வான் பகுதியில் மோதல் ஏற்பட்டது.
இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால் சீன பொருட்கள் மற்றும் ‘ஸ்பான்சர்’ நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதனையடுத்து, ‘விவோ’ நிறுவனத்தின் ‘ஸ்பான்சர்’ உரிமத்தை பி.சி.சி.ஐ., விலக்கிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்., 19 – நவ., 10ம் தேதி வரை நடக்கும் என அறிவித்த பிசிசிஐ, ஸ்பான்சராக விவோ தொடரும் என அறிவித்தது.
இந்நிலையில், புதிய திருப்பமாக பிரீமியர் லீக் ஸ்பான்சராக இந்த ஆண்டு இருக்கப்போவதில்லை என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே சமயம், அடுத்த ஆண்டு மீண்டும் பிரீமியர் லீக் ஸ்பான்சராக நீடிக்கவும், அதனை 2023 வரை தொடரவும் விருப்பம் தெரிவித்தது.
இது பிசிசிஐ.,க்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. வரும் பிரீமியர் லீக் தொடருக்கு, ரூ.440 கோடி அளிக்கும் ஒரு மாற்று டைட்டில் ஸ்பான்சரை பிசிசிஐ தேட வேண்டியது உள்ளது.