விவசாயிகள் சாலைமறியலையொட்டி தில்லி எல்லைகளில் 50 ஆயிரம் காவலர்கள், ராணுவத்தினர், மத்திய பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் தில்லியிலுள்ள 12 மெட்ரோ நிலையங்களில் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டு அதிக அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று (பிப்.6) ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் தலைநகா் தில்லி தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் நடைபெறும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
எனினும் டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட மோதல்களைப் போன்று விவசாயிகள் சாலைமறியலில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் சாலைமறியலின்போது சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவினரும் தில்லி சாலைகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.