#BREAKING : சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உட்பட நாடு முழுக்க 75 மாவட்டங்களை முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300-ஐத் தாண்டியிருக்கும் நிலையில், வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டிருக்கிறது.

சீனாவில் வைரஸ் பரவல் தொடங்கிய ஹூபே மாகாணத்தின் வுகான் நகர் உள்ளிட்ட நகரங்களை மூடி சீல் வைத்தது அந்த நாட்டு அரசு.

அங்கிருந்து மக்கள் வெளியேறவும், வெளியிலிருந்து மக்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்தே வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலான தொடர் நடவடிக்கைகளுக்குப் பின்னர், தற்போது வுகானில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாத நிலை வந்திருக்கிறது.

இதேபோல், இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அல்லது அதனால் உயிரிழப்பு ஏற்பட்ட 75 மாவட்டங்களை மூடி சீல் வைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால், வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மூடி சீல் வைக்கப்படலாம் என்று தெரிகிறது.

மற்ற மாவட்டங்களில் இருந்து இந்த மாவட்டங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும். இந்த 3 மாவட்ட எல்லைகளும் மூடி சீல் வைக்கப்படும்.

அதேபோல், இந்தப் பட்டியலில் புதுச்சேரியின் மாஹேவும் இடம்பெற்றிருக்கிறது.

கர்நாடகாவைப் பொறுத்தவரை இதுவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி கர்நாடகாவில் பெங்களூரு, தார்வாத், கூர்க், சிக்பல்லபுரா, கல்புர்கி மற்றும் மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

கேரளாவில் திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், பத்தினம்திட்டா, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் சீல் வைக்கப்படும்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவை செயலாளர் மற்றும் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் கலந்துகொண்ட உயரதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு இன்று காலை எடுக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் வரும் 31ம் தேதி வரை ரயில் சேவைகளை நிறுத்தவும் இந்தக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே