கந்த சஷ்டி விவகாரம் , வனிதா விஜயகுமார் திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானதால் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில் , கொரோனா காரணமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும் , பல்வேறு தரப்பினரும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
குறும்படம் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் போதிலும் , அதற்கென எந்தவித தணிக்கை முறையும் இல்லை என கூறியுள்ளார்.
எனவே திரைப்படங்களை தணிக்கை செய்வதை போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இது முக்கியமான வழக்கு என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு , வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.