மன்னிப்புக் கேட்க முடியாது – ரஜினிகாந்த் அதிரடி

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியார் பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் படத்தை அவர் செருப்பால் அடித்தார். அதுதொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு கருணாநிதி அரசு தடைவிதித்தது என்று பேசியிருந்தார்.

அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது.

ரஜினியின் உருவ பொம்மையை எரித்தும் அவரது கருத்திற்கு ஆதித் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெரியார் குறித்து பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பெரியார் பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இல்லாத விசயத்தை நான் கூறவில்லை, கற்பனையாகவும் எதையும் கூறவில்லை, மற்றவர்கள் கூறியது பத்திரிகையில் வந்ததையும் தான் நான் கூறியுள்ளேன் என்று ரஜினி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே