சென்னையில் பாடி அருகே, சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது, அரசுப் பேருந்து மோதியதில் பேருந்தின் நடத்துனர் பலியானார்.
ஒட்டுனர் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை தாதான்குப்பம் ரயில்வே மேம்பால சாலையில் பாடி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த தமிழ்நாடு அரசுப் பேருந்து மோதியுள்ளது.
இதில் பேருந்தின் முன்பக்கம் சிதைந்து பலத்த சேதம் ஏற்பட்டது. நடத்துனர் வீரமுத்து என்பருக்கு தலை மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார். பேருந்தின் ஓட்டுனர் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
பேருந்தில் பயணித்த 12 பேர் காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன் லாரி ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
நெல்லூரில் இருந்து வந்த அரசுப் பேருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.