காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு புகார் – லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

காவல்துறைக்கு வாக்கி டாக்கிகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, சென்னையில் எஸ்.பி., டிஎஸ்பி உள்ளிட்ட போலீஸாரின் வீடுகள் உள்ளிட்ட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கிகள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது தொடர்பாக இந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பி அப்போதைய டிஜிபிக்கு, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார். 2017-18 ம் ஆண்டில் காவல்துறையை நவீனமயமாக்க 47 கோடியே 56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டு 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்; ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக, 4000 வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்ய 83 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் புகார் தொடர்பாக, சென்னையில் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வாக்கி டாக்கி ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய போலீசாருக்கு சொந்தமான இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.

கீழ்ப்பாக்கத்தில் எஸ்.பி. அன்புச்செழியனின் வீடு, கோயம்பேடு ரோகினி திரையரங்கம் அருகே டிஎஸ்பி.உதயச்சந்திரன் வீடு மற்றும் பட்டினபாக்கம் காவலர் குடியிருப்பில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஆர்.ஏ.புரம், அடையாறு, புனித தோமையார் மலை உள்ளிட்ட மொத்தம் 30 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

போலீசாரின் வீடுகளில் நடைபெற்று வரும், லஞ்ச ஒழிப்பு பிரிவு சோதனை, காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே