மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 90,000 கன அடியில் இருந்து 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை மிகவும் தீவிரம் அடைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தொடர் மழை காரணமாக உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து ஒட்டுமொத்தமாக 1.53 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வந்து சேர்கிறது.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 45,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை இருமடங்காக அதிகரித்து 90,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 75.83 அடியாக அதிகரித்தது. இதையடுத்து நீர் இருப்பு 37.92 டிஎம்சி ஆக உள்ளது. தற்போது நீர்வரத்து ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.