பாபிஜி பப்பட் என்னும் அப்பளம், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும்’ எனக்கூறிய மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் அமைச்சர்கள், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் என அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் ‘பாபிஜி பப்பட்’ என்னும் அப்பளப் பாக்கெட்டுகளை வைத்துக்கொண்டு, ‘சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த அப்பளம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்பளம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடத் தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்க உதவும்.
இந்த அப்பளத்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு பாராட்டுக்கள்’ எனப் பேசியவாறு வீடியோ வெளியிட்டார்.
அப்பளப் பாக்கெட்டுகளை வைத்து அர்ஜுன் ராம் மேக்வாலின் இந்த வீடியோ, கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அர்ஜுன் ராம் மேக்வால் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ” கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்த நிலையில், மீண்டும் தொற்று இருப்பதாக அடுத்த சோதனையில் முடிவு வந்துள்ளது.
எனது உடல் நலம் சீராக உள்ளது. இருப்பினும், நான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அனுமதிக்கப்பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.