ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக கசிந்த தகவல் காரணமாக கிரீரி பகுதியில் மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ரிசர்வ் படை வீரர்கள் 2 பேர், ஜம்மு காஷ்மீர் போலீஸ் சிறப்பு அதிகாரி என 3 பேரும் மருத்த்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர். தற்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடம் முழுவதும் பாதுகாப்பு படை வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 3 தினங்களில் பாதுகாப்பு படை மீது பயங்கரவாதிகள் நடத்தும் 2-வது தாக்குதல் இதுவாகும். ஏற்கனவே நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.