லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தின் சுற்றளவு முழுவதும் கடும் சேதம் அடைந்துள்ளது. 200 மீ தொலைவில் உள்ள தீவிலும் விபத்தின் தாக்கம் உணரப்பட்டது. இந்த வெடிவிபத்துக்கு குடோனில் வைக்கப்பட்ட 2700 டன் அம்மோனியம் நைட்ரேட் தான் காரணம் என லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, 2700 டன் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்ட குடோனில் சிறு ஓட்டை இருந்ததாகவும் அதன் வழியாக திருட்டு நடக்கலாம் என்பதால் வெல்டிங் வைத்து அதனை அடைத்துள்ளனர்.
அப்போது பறந்த தீப்பொறி காரணமாக இந்த கொடூர வெடிவிபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.