சென்னையில் வரும் 18ம் தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு; காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி!
சென்னையில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் 07.05.2020 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் 18.08.2020 முதல் இயங்கும்.
மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது.
மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.