தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் 75 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 40 சதவிகிதம் வரை வசூலிக்கலாம், பள்ளி திறந்த பிறகு மீதியை வசூலித்துக்கொள்ளலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாத நிலையில் பல தனியார் பள்ளிகள் கட்டண வசூலில் இறங்கின.
ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறோம் என்பதால் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று பெற்றோர் வற்புறுத்தப்பட்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், “கொரோனா மிகப்பெரிய சவாலாக உள்ளது.
எப்போது வீரியம் குறையும் என்று தெரியாது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் 75 சதவிகித கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கப்படுகின்றன.
தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 40 சதவிகிதத்தை மட்டுமே முன்பணமாக வசூலிக்கலாம்.
இதை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வசூல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளிகள் திறந்த பிறகு மீதி 35 சதவிகித கட்டணத்தை வசூலித்துக்கொள்ளலாம்.
பள்ளி கட்டணத்தை செலுத்த தாமதம் ஆனால் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு பெற்றோர் மத்தியில் ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதைப் பள்ளிகள் ஏற்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.