சென்னை மணலி கிடங்கிலிருந்து அம்மோனியம் நைட்ரேட்டை அகற்ற வேண்டும் என சுங்கத்துறை ஆணையருக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ருட்டில் சேமிப்புக் கிடங்கில் டன் கணக்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்து அந்த நகரத்தையே உருக்குலைத்ததோடு, பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
இந்நிலையில் லெபனான் வெடிவிபத்து எதிரொலியாக, இந்தியாவில் துறைமுகங்கள், சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள வெடிக்கும் தன்மை உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்து 48 மணி நேரத்தில் அறிக்கை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள சேமிப்புக்கிடங்கில் தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேமிப்புக்கிடங்கில் கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பாதுகாப்பாக உள்ளதாகவும், எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மணலி கிடங்கில் கண்டெய்னரில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.