நான் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்துக்கு வந்தவன் அல்ல என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொதுச் செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் துரைமுருகன் இருப்பதாகவும், கு.க.செல்வம் போன்று துரைமுருகனும் முக்கிய முடிவு எடுப்பார் என்றும் நாளிதழ் ஒன்றில் நேற்று செய்தி வெளியானது. இது தி.மு.க வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு மறுப்பு தெரிவித்து துரைமுருகன் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சட்டமன்ற உறுப்பினர், எம்.பி பதவிகள் கிடைக்கும் என்றும் இந்த இயக்கத்துக்கு வந்தவன் அல்லன். அண்ணாவின் திராவிட நாடு கொள்கையைப் பார்த்து ஒரு போராளியாக, இந்த இயக்கத்துக்கு வந்தவன்.
நான், இதுவரை பெற்ற பதவிகள் எனக்குக் கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இருவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு கழகத்துக்காகக் கோஷமிட்டுக்கொண்டே இருப்பவன். பொதுச்செயலாளர் பதவிக்காக திமுகவில் கழகம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.” என குறிப்பிடப்பட்டுள்ளது.