சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் – ரூ.1000 கோடி வருவாய் மறைத்தது அம்பலம்..!!

சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், செல்வரத்தினம் கடைகளில் ரூ 1000 கோடி வருவாய்   மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருவான வரித் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித் துறை வெளியிட்ட செய்தி:

“நகை, ஆடை, வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் சென்னையை மையமாக கொண்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், செல்வரத்தினம் கடை நிறுவனங்களின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி கிளைகள் என மொத்தம் 37 இடங்களில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சோதனைகள் நடத்தப்பட்டன.

இவற்றில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமும் முறைகேடாக கணக்குகளை கையாண்டதன் மூலம் பல ஆண்டுகளாக ரூ. 1,000 கோடி வருவாயை மறைத்தது தெரிய வந்துள்ளது. கணக்கில் வராத ரூ. 150 கோடி மூலம் பல ஆண்டுகளாக ஆடை மற்றும் நகைப் பிரிவுகளில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

போலி ரசீதுகள் மூலம் ரூ. 80 கோடி வருவாய் மறைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனங்களில் இருந்து ரூ. 10 கோடி பணமும், ரூ. 6 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வருவாய் மறைத்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே