#BREAKING : தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67ஆக உயர்வு..

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நேற்று வரை தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் இது 67 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இன்று உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் நேற்று வரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், இன்று 67 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கரோனா பாதித்து ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், 25 லட்சம் என்-95 ரக முகக்கவசங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 1.50 கோடி சாதாரண முகக்கவசங்கள் வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளுக்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா அறிகுறியுடன் இருப்பவர்களில், இன்னும் 121 பேரின் ஆய்வு முடிவுகள் வரவேண்டியுள்ளது.

எல்லோருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடியாது. அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்படும்.

தமிழகத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பிற மாநிலங்களை விட தமிழக மக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 10 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால், கரோனாவுக்கு தற்போது இருப்பது ஒரே தடுப்பு மருந்து, மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதுதான்.

வீட்டு வாடகைதாரர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே