மதுரையில் இன்று புதிதாக 334 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மதுரையில் வேகமெடுக்கும் காரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, தேவையின்றி வெளியில் வாகனங்களில் சுற்றுவோரைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிரம் காட்டியுள்ளனர்.
குறிப்பாக மேம்பாலங்களை மூடி, முக்கியப் பகுதிகளை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சென்னையைப் போன்று மதுரையிலும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. தொற்று பாதிப்பும், இறப்பு விகிதமும் தொடர்ந்து கூடுகிறது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளது.
மதுரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, வெளியில் வாகனங்களில் வருவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்.
நகரில் 1,700-க்கும் மேற்பட்ட தெருக்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என, சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற பகுதிகளில் இருந்து யாரும் வெளியில் செல்லக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையின்றி வெளியில் வாகனங்களில் வருவோரைக் கட்டுப்படுத்தும் விதமாக நகரில் எல்லீஸ்நகர் மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய பாலங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து காவல் துறையினர் மூடியுள்ளனர்.
பெரியார் பேருந்து நிலையப் பகுதி, மாசி வீதிகள் உட்பட மக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அவசியமின்றி வெளியில் வருவோர் மீது போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்நிலையில் இன்று மதுரையில் புதிதாக 334 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,674 ஆக உயர்வு என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.