பெண்களை கொச்சைப்படுத்தியவர்களைக் கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜக நிர்வாகிகளை தமிழக காவல்துறை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மருது சகோதரர்கள் குரு பூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார் கோயில் செல்லவதற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார்.

அப்போது அவருக்கு பாஜக சார்பில் விமான நிலையத்தில் வவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “தமிழகத்தின் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவோரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜக நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

50% இட ஒதுக்கீடு வாய்ப்புகள் குறைவு என்று ஏற்கெனவே உயர் நீதிமன்றம் கூறி இருந்ததை, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு இதை அமல்படுத்த பாஜக சார்பில் முயற்சிகள் எடுக்கப்படும்.

மத்திய அரசை குறை சொல்வதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

திமுக கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியவர்களுக்கும், பெண்களைக் கொச்சைபடுத்தும் விதத்தில் பேசுவோரையும் பாதுகாக்கும் நடவடிக்கையை தான் மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக அவர்களது ஆதரவு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே அவர்களுக்கு எதிராக செயல்பட்டாலும் அவர்களை பாதுகாத்தே வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

ரஜினி கட்சி தொடங்கவில்லை. இருப்பினும், பாஜகவுடன் கூட்டணி அமைவது குறித்து இறுதி முடிவு ரஜினியை பொறுத்துதான்.

சடட்ப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற தயார்ப்படுத்தும் பணிகள் தற்போது இருந்தே தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் பலமாக அமையும்” என்றார்.

‘பாஜக ரவுடிகள் மிக்க கட்சியாக உள்ளது’ என்று டி.கே.எஸ் இளங்கோவன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக தாய்மார்களைக் கொச்சைப் படுத்தியவர்களை தமிழ் சகோதரிகளே நடமாட விடமாட்டார்கள் என்றுதான் தெரிவித்து இருந்தோம்’ எனக் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே