கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி இன்று வீடு திரும்பினார்.

சௌரவ் கங்குலிக்கு கடந்த 2-ஆம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில், ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் பொருத்தப்பட்டு, அகற்றப்பட்டது.

சௌரவ் கங்குலியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினா் புதன்கிழமை காலை முழுமையாக பரிசோதித்தனா். அவா் உடல்நலம் தேறிவிட்டாா்.

அவா் புதன்கிழமையே வீடு திரும்புவதாக இருந்தது. இருப்பினும், மருத்துவமனையில் மேலும் ஒரு நாள் அவா் ஓய்வெடுக்க விரும்பினாா். எனவே சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளார் கங்குலி.

மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை. அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் செய்தியாளர்கள் முன்னிலையில் கங்குலி கூறியதாவது: நான் நலமுடன் உள்ளேன். எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி. விமானத்தில் விரைவில் பறப்பேன் என நம்புகிறேன் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே