பேட்டிங் சொதப்பல், தவறான கேப்டன்ஸி: இந்திய அணிக்கு கிடைத்தது தோல்வி;நம்பர் ஒன் என நிரூபித்தது இங்கிலாந்து

ஜோப்ரா ஆர்ச்சர், மார் உட், ஜோர்டன் ஆகியோரின் அதிவேகமான பந்துவீச்சால் அகமதாபாத்தில் நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமேசேர்த்தது. 125 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து அணி டி20 போட்டியில் தொடர்ந்து பெறும் 4-வது வெற்றி இதுவாகும். அதேசமயம், இந்திய அணி டி20 போட்டியில் தொடர்ந்து 2-வது தோல்வியைச் சந்தித்துள்ளது.கடந்த 10 டி20 தொடரில் 8 முறை, முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோற்றுள்ள நிகழ்வு இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது.

இந்திய அணி நேற்று அடித்த 124 ரன்களை வைத்துக்கொண்டு முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று கேப்டன் கோலி நம்பினால், வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்று பேசுவதுபோல் ஆகிவிடும்.
உலகின் நம்பர் ஒன் டி20 அணியான இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பலான பேட்டிங், அதிலும் 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு ஆடுவேன் கோலி நினைத்தால் அதைவிட மோசமான கேப்டன்ஷி வேறு இல்லை.

தோல்வியின் அழுதத்தை பந்துவீச்சாளர்கள் மீது சுமத்தாமல், பேட்டிங்கில் சொதப்பிய விஷயங்களை சரிசெய்து, சரியான வீரர்களையும் தேர்ந்தெடுத்து அடுத்தப்போட்டியில் விளையாட வேண்டும்.

அகமதாபாத் ஆடுகளத்தில் மொத்தம் 11 பிட்ச் இருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆடுகளம் என நினைத்து கோலி, 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து எந்தத் துணிச்சலில் ஆடினார் எனத் தெரியவில்லை.

தோல்விக்கு காரணம்

இந்திய அணியின் தோல்விக்கு தவறான கேப்டன்ஷி முடிவும், டாப்ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பியதும்தான் காரணம். கேப்டன் விராட் கோலி நேற்றுமுன்தினம் வரை ரோஹித் சர்மா, ராகுல்தான் ஆட்டத்தைத் தொடங்குவார்கள் என உறுதியாகக் கூறிவிட்டு ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளித்தது ஏன் எனத் தெரியவில்லை.

ஒருநாள், டி20 போட்டிகளில் அற்புதமான தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தக்கூடியவர், நல்ல ஃபார்மில் இருக்கிறார் அவருக்கு ஏன் ஓய்வு கொடுத்தார்கள் என புரியவில்லை.

ஃபார்மில் இல்லாத ஷிகர் தவண் 3-வது ஓப்பனராகவே வைத்திருக்க வேண்டும் என்று பேசப்பட்ட விஷயத்தை நேற்று தனது சொதப்பலான பேட்டிங்கில் நிரூபித்து விட்டார்.

அஸ்வின் வேண்டும்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சிறப்பாகப் பந்துவீசியதால் அக்ஸர் படேலும், பேட்டிங் செய்தார் என்பதற்கா ரிஷப்பந்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். டெஸ்ட் தொடரை மதிப்பிட்டு இருவரும் அணிக்குள் வந்திருந்தால், இதில் தமிழக வீரர் அஸ்வின் எந்தவிதத்தில் குறைந்தவர். பவர்ப்ளே, டெத் ஓவர், மிடில் ஓவர் அனைத்திலும் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். பேட்டிங்கிலும் ஓரளவுக்கு ஆடக்கூடியவர் அவரை ஏன் தேர்வு செய்ய மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை. கோலியின் நெருக்கடி காரணமா என்ற கேள்வியும் எழுகிறது. இனியும் தாமதிக்காமல் அஸ்வின் டி20 அணிக்குள் கொண்டுவர வேண்டும்.

3-வது டக்அவுட்

கேப்டன் கோலி கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக டக்அவுட் ஆகியுள்ளார். சென்னை டெஸ்டில், அகமதாபாத்தில் நடந்த 4-வது டெஸ்ட் நேற்றைய ஆட்டத்தில் டக்அவுட் என கோலியின் பேட்டிங் ஃபார்மும் மீதும் கேள்வி எழுப்ப வேண்டியதுள்ளது.

அதில் ரஷித் வீசிய மெதுவான பந்தை கோலி விலகி ஆட வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை அடிக்கவேண்டும் என்றால் 22 யார்ட்ஸ் மேல் தூக்கி அடித்திருக்க வேண்டும். ஜோர்டானின் கைக்கு செல்லுமாறு கோலி அடித்ததை என்னவென்று சொல்வது.

ஜாம்பவான்கள்

ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மணிக்கு 140 கி.மீ வேகத்துக்கு அதிகமாக வீசக்கூடியவர்கள். இவர்களின் பந்துகளி்ள் ஷாட் அடிக்கும் போது பேட்ஸ்மேன் பேட்டை இறுக்கமாகப் பிடிப்பதும், பந்து போகும் போக்கில் காலை நகர்த்தி ஆடுவதும் அவசியம். சச்சின், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் இதை மிகத்துல்லியமாகச் செய்வார்கள்.

ஆனால், கே.எல்.ராகுல் பேட்டை இறுகப்படிக்காமல் இருந்ததாலும், முன்னங்காலை நகர்த்தாமல் ஆடியதால் பேட்டில் பட்டு போல்டாகியது. அதிலும் தொடக்கத்திலிருந்தே திணறிய தவண், தேவையில்லாமல் ஷாட் ஆடி விக்கெட்டை இழந்தார்.

சுந்தரை சரியாகப் பயன்படுத்தவில்லை

டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பும்போது ஒட்டுமொத்த அழுத்தமும் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தலையில் விழும், இதனால், 6-வது, 7-வது பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடும் சூழலைத் தவிர்த்து விக்கெட்டை நிலைப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் அதுதான் நடந்தது.

பவர்ப்ளேயில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர் வாஷிங்டன் சுந்தர். அவருக்கு மிகவும் தாமதமாகவே கோலி ஓவரைக் கொடுத்தார். ஏறக்குறைய வெற்றி இங்கிலாந்தின் கைகளுக்குச் சென்றபின் சுந்தரை பந்துவீசச் செய்வதில் என்ன பயன்.

டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்திவிட்டோம் என்ற வெற்றி மமதையில் கோலி கேப்டன்ஷி செய்தாரா என்ற நினைக்கத் தோன்றுகிறது.

பேட்டிங்கில் அனைவருக்கும் சுதந்திரம் அளிப்போம், இதன் மூலம்தான் உலகக் கோப்பைஅணியைத் தேர்வு செய்யப்போகிறோம் எனக் கூறிய கோலியின் பேச்சுக்கும் டாப்ஆர்டர் பேட்டிங்கிங் சொதப்பலுக்கும் தொடர்பே இல்லை.

ஜோப்ரா ஆர்ச்சர், ஜோர்டான், மார்க் உட் ஆகியோர் சராசரியாக 145 கி.மீ வேகத்தில் பந்துவீசுகிறார்கள். அதிலும் மார்க் உட் 150 கி.மீ வேகத்தைக் கடந்து சில நேரங்களில் பந்துவீசினார். இதுபோன்ற மிரட்டலான பந்துவீச்சை கோலி நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

பல் இல்லாத வேகப்பந்துவீச்சு

ஆனால், பும்ரா, ஷமி இல்லாதது, பல் இல்லாத வேகப்பந்துவீச்சு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமார், தாக்கூர் இருவரும் என்னதான் வீசினாலும், 130 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லவில்லை, ஸ்விங்கும் ஆகவில்லை. சுழற்பந்துவீச்சை மட்டுமே ஆட்டத்தை நகர்த்திவிடுவோம் என நினைத்துவிட்டாரா கோலி.
இனியும் காத்திருக்காமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திவேட்டியா ஆகியோரை களமிறக்க வேண்டும். ஷிகர் தவணுக்கு ஓய்வு அளித்து ஓரம் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் இல்லாவிட்டால் இந்திய அணியின் மதிப்பு, கவுரவம் முதல்ஆட்டத்திலேயே காற்றில் பறந்திருக்கும். ரிஷப்பந்த் அருமையான ஃபார்மில் இருப்பதை நிரூபித்துவிட்டார், ஷாட் செலக்ஸன் மட்டும் சரியாக இருந்திருந்தால், நேற்று பட்டையை கிளப்பி இருப்பார்.

பந்த் பட்டைய கிளப்பினார்

அதிலும் 140 கி.மீ வேகத்தில் வீசிய ஜோப்ராஆர்ச்சரின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஆடிய ரிஷப்பந்த்தின் துணிச்சல் பாராட்டுக்குரியது. டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸனை மிரளவிட்ட பந்த், டி20 போட்டியில் ஆர்ச்சரை அசரவைத்துவிட்டார். ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் விளையாட ஃபார்முக்கு வரவில்லை.

பீல்டிங்கில் இந்திய அணி நன்றாக முன்னேறியிருக்கிறது. சில பின்னடைவுகள் இருந்தாலும், மொத்தத்தில் பீல்டிங்கில் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது. அதிலும் கே.எல்.ராகுல் நேற்று பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து பின்னர் சிக்ஸராக சென்றுவிடக்கூடாதே என களத்தில் தூக்கி எறிந்தது அருமையான பீல்டிங்.

விலைபோகாத ஜேஸன் ராய்

125 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் ஜேஸன் ராயை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணி நிர்வாகமும் விலைக்கு வாங்கவில்லை. ஆனால், தன்னுடைய பேட்டிங் ஃபார்மை முதல்போட்டியில் வெளிப்படுத்தி பாடம் நடத்திவிட்டார்.

பவர்ப்ளேயில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் சேர்த்தபோது, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் பட்லர், ராய் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களுக்கு கொண்டு சென்றுவிட்டனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். சஹல் பந்துவீச்சில் பட்லர் 28 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்து டேவிட் மலான் களமிறங்கினார்.

அரைசதம் நோக்கி நகர்ந்த ராய், 32 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்த நிலையில், சுந்தர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். மலான் 24, பேர்ஸ்டோ 26 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணி 8 விக்கெட்டில் வென்றது.

விக்கெட் சரிவு

முன்னதாக, டாஸ்வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் தவண்(4), ராகுல்(1), கோலி(0) ஆகியோரின் விக்கெட்டுகள் சரிந்தன. 22 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட 3-வது மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். அதிரடியாகத் தொடங்கிய பந்த் 21 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் டீப் லெக் ஸ்கொயரில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பொறுப்பான ஆட்டம்

ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் அய்யர் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தனர். மிகவும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சை லாவகமாகக் கையாண்டார். ஸ்ரேயாஸ் அய்யரின் ஒவ்வொரு ஷாட்டும், அற்புதமாக இருந்தது.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா ஒருசிக்ஸர், பவுண்டரியுடன் 19 ரன்னில் ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். தாக்கூர் வந்த வேகத்தில் ஆர்ச்சர் பந்தில் அதிரடியாக ஆட முற்பட்டு விக்கெட்டை இழந்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்னில் ஜோர்டான் பந்துவீச்சில் மலானால் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார். கடைசி 15 ரன்களுக்கு மட்டுமே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. இங்கிலாந்து அணித் தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே