‘அய்யப்பனும் கோஷியும்’ இந்தி ரீமேக் படக்குழுவினர் முடிவு

அய்யப்பனும் கோஷியும்’ இந்தி ரீமேக் படக்குழு முடிவாகியுள்ளது.

பிப்ரவரி 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்த இந்தப் படத்தில் பிஜு மேனன், ப்ரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பவன் கல்யாண், ராணா ஆகியோர் நடித்து வருகிறார்கள். தமிழ் மற்றும் இந்தி ரீமேக்குகளும் முடிவாகி, முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்தி ரீமேக்கின் படக்குழு முடிவாகியுள்ளது. இதில் ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பச்சன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ‘தோஸ்தானா’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் இருவரும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை ‘மிஷன் மங்கல்’ இயக்குநர் ஜெகன் ஷக்தி இயக்கவுள்ளார். தற்போது இந்தித் திரையுலகிற்கு ஏற்றவகையில் திரைக்கதையை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஜூலை மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

‘அய்யப்பனும் கோஷியும்’ இந்தி ரீமேக்கை முடித்துவிட்டு, மீண்டும் அக்‌ஷய் குமார் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ஜெகன் ஷக்தி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே